×

வாலிபர்களை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட விவகாரம் போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்: 10 பெட்டிகளில் போலீசார் எடுத்து சென்றனர்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசிப்பவர் கேசவமூர்த்தி (47). போலி சித்த மருத்துவரான இவர், கடந்த 13ம் தேதி தன்னிடம் வைத்தியம் பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக்ராஜ் (27) என்பவரை போதை மருந்து கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து உடலை தனது வீட்டின் பின்புறம் புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கேசவமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை வீட்டிலேயே மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டதும், கடந்த 2021 நவம்பர் 27ம்தேதி மாயமான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது அனஸ் (26) என்ற இளைஞரையும், அசோக்ராஜை கொலை செய்தது போல் கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதனை வீட்டின் கொள்ளை புறத்தில் புதைத்தும், குறிப்பிட்ட பாகங்களை சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. கேவசமூர்த்தி மேலும் பலரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் நேற்று காலை தஞ்சாவூர் எஸ்.பி ஆஷிஷ் ராவத், கேசவமூர்த்தி வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர், கைரேகை நிபுணர் ஏடிஎஸ்பி ஹேமா மற்றும் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் சோழா என்ற மோப்ப நாய் உதவியுடன் கேசவமூர்த்தி வீட்டில் காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஐந்தரை மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வீட்டின் முன்பு பகுதி மற்றும் கொல்லைபுறத்தில் இருந்த மூலிகைச்செடி உள்ளிட்ட வாழை மரங்கள் அனைத்தையும் போலீசார் அகற்றினர்.

தொடர்ந்து அங்கே 3 அடி அளவிற்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்தது. அந்த எலும்புகள் பார்ப்பதற்கு ஒரு நாயின் மண்டை ஓடு மற்றும் அதன் எலும்புகள் போல இருந்தது. இதில் சேகரிக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகளா அல்லது முகமதுஅனஸ் உடல் பாகங்களா என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், கேசவமூர்த்தி வீட்டில் இருந்த மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் நகைகள், நைட்டி, ஆடைகள், பயன்படுத்தாத பொருட்களை 10க்கும் மேற்பட்ட பெட்டைகளில் போலீசார் எடுத்து சென்றனர்.

The post வாலிபர்களை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட விவகாரம் போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்: 10 பெட்டிகளில் போலீசார் எடுத்து சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Kesavamurthy ,Thanjavur… ,
× RELATED ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் சரமாரி வெட்டிக் கொலை: 5 பேருக்கு வலை