அந்தியூர்,நவ.25: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் செயல்படும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பெண்களுக்கான லேப்ராஸ்கோப்பி முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது. இதில் அந்தியூர், எண்ணமங்கலம், சின்னத்தம்பிபாளையம் மற்றும் பர்கூர் மலைப்பகுதியிலிருந்து மொத்தம் 45 பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு நேற்று அத்தாணியில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் லேப்ராஸ்கோப்பி முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். குறிப்பாக பர்கூர் மலை பகுதியில் இருந்து 15 பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒவ்வொருவருக்கும் மூன்று குழந்தைகள் முதல் ஆறு குழந்தைகள் உள்ளது. இவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு நேற்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் அந்தியூர் வட்டார சுகாதார நிலையத்தில் 142 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர்கள், மற்றும் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு குடும்ப நலத்துறை மாவட்ட துணை இயக்குனர் பொருப்பு செந்தில்குமார் பாராட்டினார்.
The post அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 45 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் appeared first on Dinakaran.