×

மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க கவர்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை: பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு, அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

புதுடெல்லி: மாநில அரசின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் கட்டுப்படுத்த முடியாது. அதுபோல, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மசோதாக்களை ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தார்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டிருந்தார். இதை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 10ம் தேதி தீர்ப்பளித்தது. விரிவான தீர்ப்பு உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் நேற்றுமுன்தினம் இரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மாநில சட்டப்பேரவைகள் சட்டம் இயற்றுவதை தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் தடுக்க முடியாது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவர். ஆளுநருக்கு, தனியாக எந்த அதிகாரமும் கிடையாது. மாநில அரசும் அதன் அமைச்சர்களும் சொல்கிறபடிதான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். ஆளுநர் இதுபோல செயல்படவில்லை என்றால், அது சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் செயலாக மாறிவிடும். மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை ஆளுநர் தனக்குள்ள கட்டுப்பாடற்ற விருப்புரிமையை பயன்படுத்தி தடுக்க முயல்வது நாடாளுமன்ற ஆட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது.

ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. அதன்படி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கலாம் அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம் அல்லது மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் தேவையான குறிப்புகளுடன் கூடிய ஒரு மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பலாம். திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ மசோதாவை மீண்டும் சட்டப்பேரவை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசியல் சட்டம் 200வது பிரிவு அளித்துள்ள அதிகாரப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்தால், அதை சட்டப்பரேவையின் பரிசீலனைக்கு திரும்ப அனுப்புவதுதான் சரியான வழி. கூட்டாட்சியும் ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை. இதில் ஏதாவது ஒரு அம்சம் நீர்த்துப்போகும் போது அது மற்றொன்றை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி நமது குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு இன்றியமையாதது. இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்படும் போதெல்லாம், அது அரசியலமைப்பு நிர்வாகத்தை பாதிக்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாத நிலையில், கடந்த ஜூன் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெற்ற கூட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும்.

அப்படி, சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு முழு அதிகாரமும் உள்ளது. சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவையை நடத்துவதற்கு சபாநாயகர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, அந்தக் கூட்டத்தை சட்டப்பூர்வமானதல்ல என்று ஆளுநர் கூறுவது ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடிந்துவிடும். அப்படி ஒரு சந்தேகத்தை எழுப்ப ஆளுநருக்கு எந்தவித உரிமையும் கிடையாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குதான் உண்டு. அமைச்சர்களுக்கும், அமைச்சரவைக்கும் சட்டப்பேரவைக்கு பதிலளிக்க வேண்டியது கட்டாயம்.

அமைச்சர்களின் செயல்பாடுகளை மாநில சட்டப்பேரவை ஆய்வு செய்யலாம். ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் எப்படி பரிசீலனை செய்ய வேண்டும் என்று எந்த கருத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ஆனால், அரசியல் சட்டம் 200வது பிரிவின் விதிகள்படி ஆளுநர் மசோதாக்களை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களும் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* தலைவர்கள் வரவேற்பு: மாநில சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

* மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு முதல்வர்): மாநில சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த ஸ்பீக்கிங் போர் இந்தியா எபிசோடில் விரிவாக பேசுகிறேன்.

* ப.சிதம்பரம் (முன்னாள் ஒன்றிய அமைச்சர்): ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்களுக்குமான கண்டனம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீதிமன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படித்து விட்டு, அது அவசியம் என நினைத்தால், திறமையான மூத்த வழக்குரைஞர் ஒருவரை அமர்த்தி நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

* கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு, கேரள ஆளுநர்களுக்கும் பொருந்தும். இந்த தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்து கொண்டு அரசமைப்புச் சட்டப்படி செயல்பட முன்வர வேண்டும். அப்படி செயல்படவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

* கி.வீரமணி (தி.க. தலைவர்): ஆளுநர்களின் அதீதத்திற்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கி வாசிக்கவேண்டும்.

* முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): உச்ச நீதிமன்ற விமர்சனங்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் கேரளா, பஞ்சாப், தெலங்கானா, டெல்லி, மேற்குவங்க ஆளுநர்கள் பதவி விலகி நல்ல முன்உதாரணத்தை ஏற்படுத்த வேண்டும்.

* கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): மக்களால் தேர்ந்ெதடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு இருக்கிற அதிகாரத்தை எந்தவிதத்திலும் ஆளுநர் மீறக்கூடாது. சட்டமன்ற நடவடிக்கைகளை முடக்க கூடாது. அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து இருப்பது உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளும் வரவேற்றுள்ளன.

*பஞ்சாப் வழக்கின் தீர்ப்பை படியுங்கள் கேரள ஆளுநருக்கு நீதிபதிகள் அறிவுரை
மசோதாக்களை கிடப்பில் போட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் நாங்கள் அளித்த தீர்ப்பு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை கேரள ஆளுநரின் கவனத்துக்கு கூடுதல் தலைமை செயலாளர் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க கவர்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை: பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு, அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Punjab government ,New Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு