×

119 பதவிக்கு 1,875 வேட்பாளர்கள் போட்டி; ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு: காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா?


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 119 பதவிகளுக்கு 1,875 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டீகர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் கடந்த 7ம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின் டிச. 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும். மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.

தொடர்ந்து ராஜஸ்தானில் நாளையும் (சனிக்கிழமை), தெலங்கானாவில் வருகிற 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. இவற்றில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவும் நேரடி களத்தில் உள்ளன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா போன்ற தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதைத்தவிர ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜஸ்தான் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வந்தன.

கடந்த சில வாரங்களாக நடந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளது. மாநிலத்தின் மொத்தமுள்ள 200 தொகுதிளில் 199 இடங்களுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஸ்ரீகங்காநகர் மாவட்டம் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால், அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் தேர்தலில் 5.25 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். மொத்தம் 119 தொகுதிகளில் 183 ெபண்கள் உட்பட 1,875 பேர் போட்டியிட்டுள்ளனர்.

மொத்தம் 2,605 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 240 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, 490 பேர் வாபஸ் பெற்றனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் நிறைவு செய்துள்ளது. அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

The post 119 பதவிக்கு 1,875 வேட்பாளர்கள் போட்டி; ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு: காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Congress ,Jaipur ,Dinakaran ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...