×

வாலாஜா அருகே தனியார் கம்பெனியில் ராட்சத டேங்க் வெடித்து ரசாயன கலவை சாலையில் ஓடியது: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் அவதி


வாலாஜா: வாலாஜா அருகே தனியார் கம்பெனியில் ராட்சத டேங்க் வெடித்து ரசாயன கலவை ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த டோல்கேட் அருகே முசிறி கிராமம் உள்ளது. பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிமீ தூரமுள்ள இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக தனியார் கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் அலுமினிய சல்பைடு தயாரித்து ராணிப்பேட்டையில் உள்ள பெரிய மற்றும் சிறிய கம்பெனிகள், தோல் தொழிற்சாலைகள், பேப்பர்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த அலுமினிய சல்பைடை வாங்கி செல்லும் தோல் கம்பெனிகள், கம்பெனிகளில் உள்ள பெரிய அளவிலான டேங்க்கில் உள்ள கழிவுகளை தூய்மை செய்வார்களாம்.

இந்நிலையில் அதிக சக்தி வாய்ந்த இந்த அலுமினிய சல்பைடை 12 ராட்சத பிளாஸ்டிக் டேங்க்குகளில் வெட்ட வெளியில் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு டேங்க் உடைந்து அலுமினிய சல்பைடு மஞ்சள் நிறத்தில் வெளியேறி ஆறாக ஓடியது. வளாகம் முழுவதும் பரவிய இந்த சல்பைடு சாலையிலும் வெளியேறியது. சல்பைடு வெளியேறியதால் அதிகளவு வெண்புகை மற்றும் நெடி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த செக்யூரிட்டி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே ஓடிவந்தார். மேலும் அவ்வழியாக சென்றவர்களுக்கும் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயைணப்பு வீரர்கள், முழு கவச உடை அணிந்து தண்ணீரை பீய்ச்சி வெண்புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தண்ணீரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அங்கிருந்த எம்.சாண்ட், மணல் ஆகியவற்றை கொண்டு சல்பைடு மீது கொட்டி சுமார் 3 மணி நேரம் போராடி அதனை கட்டுப்படுத்தினர். டேங்க் உடைந்து சல்பைடு வெளியேறிய நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் கம்பெனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு முச்சுத்திணறலால் அவதிப்பட்ட செக்யூரிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இருப்பினும் வெண்புகை அப்பகுதி முழுவதும் பரவியதால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

The post வாலாஜா அருகே தனியார் கம்பெனியில் ராட்சத டேங்க் வெடித்து ரசாயன கலவை சாலையில் ஓடியது: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Walaja ,Dinakaran ,
× RELATED சேப்பாக்கம் மைதானம் அருகே...