×

பைக் வாட்டர் வாஷ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

குன்றத்தூர்: மாங்காடு அருகே பைக் வாட்டர் வாஷ் செய்தபோது, மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக பலியானார். பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர், மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்பு மற்றும் வாட்டர் வாஷ் செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கார்த்திக், கடையை திறந்து மோட்டார் சைக்கிள்களை சர்வீஸ் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சர்வீஸ்க்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாட்டர் வாஷ் செய்தபோது, திடீரென கம்ப்ரசரில் இருந்து வந்த மின்சாரம் கார்த்திக் மீது பாய்ந்தது.இதில், தூக்கி வீசப்பட்ட கார்த்திக் மார்பு மீது கம்ப்ரசர் மெசினும் சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே கார்த்திக் மூச்சு, பேச்சின்றி மயங்கி விழுந்தார்.
இதனைபார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்காடு போலீசார், கார்த்திக் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பைக் வாட்டர் வாஷ் செய்தபோது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி appeared first on Dinakaran.

Tags : Kunradthur ,Mangadu ,Poontamalli ,Senneerkuppam ,Dinakaran ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை