×

தொடர் மழைக் காரணமாக காஞ்சி, செங்கை மாவட்டத்தில் நிரம்பி வழியும் 146 ஏரிகள்

காஞ்சிபுரம்: தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.  இந்நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தொடர் மழையின் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்து வந்துக்கொண்டு இருப்பதால் உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கல், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வேளியூர் சித்தேரி, வெங்கச்சேரி, பழைய சிவரம் உள்ளிட்ட 146 சிறிய ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அதன்படி, ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் இருக்கின்றன. இதில், மேற்கூறிய 45 ஏரிகள் 100 சதவீதமும், 29 ஏரிகள் 75 சதவீதமும், 61 ஏரிகள் 50 சதவீதமும், 175 ஏரிகள் 25 சதவீதமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 101 ஏரிகள் 100 சதவீதமும், 127 ஏரிகள் 75 சதவீதமும், 159 ஏரிகள் 50 சதவீதமும், 125 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன.

மேலும், மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான செங்கல்பட்டு – கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் தடுப்பணை நிரம்பி 2171.26 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், வாயலூர் தடுப்பணை கடல்போல் காட்சியளிக்கிறது.

The post தொடர் மழைக் காரணமாக காஞ்சி, செங்கை மாவட்டத்தில் நிரம்பி வழியும் 146 ஏரிகள் appeared first on Dinakaran.

Tags : Kanchi ,Sengai ,Kanchipuram ,Chengalpattu district ,Tamil Nadu… ,Kanchi, Senkai district ,Dinakaran ,
× RELATED கருடன் கருணை