×

வெங்கச்சேரி செய்யாற்றில் வெள்ள பெருக்கு; ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடக்கும் மக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மாகரல் – வெங்கச்சேரி இடையே செய்யாறு பகுதியில் காஞ்சிபுரம் ஒன்றியத்தையும், உத்திரமேரூர் ஒன்றியத்தையும் இணைக்கும் உயர்மட்ட தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம்  கடந்த 2015ல்  பெய்த மழையால் சேதமானது. இதனால் உத்திரமேரூர் – காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது தற்காலிகமாக தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் துவங்கியது. இந்நிலையில், வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.  அதன்படி கடந்த 2016ல்  உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. செய்யாற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம்  உத்திரமேரூர் – காஞ்சிபுரம்  இடையே போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என உத்திரமேரூரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் இருந்து 15 ஆயிரம்  கன அடி  உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் செய்யாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு  தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக, வெங்கச்சேரி செய்யாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி வெள்ளநீர் பாய்ந்து செல்கிறது. செய்யாற்றில் கூடுதலாக நீர் மட்டம் உயர்ந்தால் வெங்கச்சேரி  தரைப்பாலம் முழுவதுமாக அடித்துச் செல்லப்படும். இதனால் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஒன்றியங்கள் துண்டிக்கப்பட்டு  150க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே வெங்கச்சேரி தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுக்கு கம்புகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி   பாலம்  பலப்படுத்தப்பட்டது. தற்போது தொடர் மழை  காரணமாக  மீண்டும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள வெங்கச்சேரி தரைப்பாலத்தில் ஆபத்தான முறையில் வாகனங்களிலும் நடந்தும் மக்கள் கடந்து செல்கின்றனர். பருவ மழைக்கு பிறகாவது வெங்கச்சேரி தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. …

The post வெங்கச்சேரி செய்யாற்றில் வெள்ள பெருக்கு; ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Venkacherry ,Kanchipuram ,Magaral – Venkacherry ,Uttaramerur ,Venkachery ,Dinakaran ,
× RELATED கோடையின் கடும் வெப்பத்தால் நீரின்றி...