×

நிலஎடுப்பு விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படுத்தி செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்


சென்னை: நிலஎடுப்பு விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படுத்தி, செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதி மேல்மா உள்ளிட்ட சுற்று வட்டார விவசாயிகள் அரசின் நில எடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். கடந்த ஜூலை 2ம் தேதி அரசு நில எடுப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர்.

அந்தப் போராட்டம் அமைதியாக நீடித்து வந்த நிலையில் தொடர்புடைய அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள், விவசாயிகள் உணர்வுகளை உள்வாங்கி பிரச்சினைக்கு தீர்வு காண தவறியதால் போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி தீவிரமானது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 20 க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். இதையடுத்து, சிறையில் இருந்த 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் சிறையில் இருந்து வரும், விவசாயிகளின் குடும்பத்தினர் முறையிட்டதை தொடர்ந்து அரசு கடுமையான நிபந்தனைகள் விதித்து 6 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம், போராட்டத்தை ஒருங்கிணைத்து, வழி நடத்தி வரும் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்கிறது. இது தவிர விவசாயிகள் மீதான வழக்குகளும் தொடர்கின்றன. எனவே, மேல்மா சிப்காட் நில எடுப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, சிறையில் உள்ள அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நிலஎடுப்பு விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படுத்தி செய்யாறு விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Mutharasan ,Chennai ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...