×

நடிகை கவுதமியின் சொத்துக்கள் மோசடி விவகாரம் முக்கிய குற்றவாளி அழகப்பன், மனைவிக்கு லுக்அவுட் நோட்டீஸ்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சினிமா நடிகை கவுதமி கடந்த செப்டம்பர் 11ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2004ம் ஆண்டு தனக்கு புற்றுநோய் ஏற்பட்ட காரணத்தால் எனது 4 வயது மகளின் எதிர்க்காலத்திற்காக அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை நான் பவர் ஏஜெண்டாக நியமித்தேன். ஆனால் அவர், தனது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா அழகப்பன்(எ)சதீஷ், மகள் ஆர்த்தி அழகப்பன் மற்றும் உறவினர்களான பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கடந்த 2015-16ம் ஆண்டு பெரும்புதூரில் உள்ள 10.63 ஏக்கர் விவசாய நிலம், ₹4.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், அவர் எனது வங்கி கணக்கில் ₹58 லட்சம் மற்றும் ₹4.20 லட்சம் மட்டும் வரவு வைத்துள்ளார். மீதமுள்ள பணத்தை அழகப்பன் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் உள்ள வங்கி கணக்கில் மாற்றிவிட்டார்.

அதேபோல், கடந்த 10.2.2021ம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள 8.23 ஏக்கர் நிலத்தை அழகப்பன் தனது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் என்னுடைய நிலத்தை பதிவு செய்து கடந்த 20.10.2015ம் ஆண்டு எனது சொத்துக்களை ஏமாற்றி பறித்து கொண்டார்.அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததில் ₹7 கோடி பணத்தை அவரது கூட்டாளியான அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் பலராமன் உள்ளிட்டோருடன் சேர்ந்த ஏமாற்றிவிட்டார். அந்த புகாரின் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது, அழகப்பன், தனது மனைவி நாச்சல் அழகப்பன் மற்றும் மகன், மகள் பெயர்களில் சொத்துக்களை மாற்றி எழுதியதும், தனது நண்பரான பலராமன் மூலம் ₹7 கோடி பணத்தை மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து அழகப்பன் அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் பலராமன் மீது தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் ₹7 கோடி மோசடி வழக்கில் தொழிலதிபர் பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.இந்நிலையில் நடிகை கவுதமி சொத்துக்கு பவர் ஏஜென்டாக இருந்து அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் அழகப்பன் ஆகியோர் இரண்டு வழக்குகளில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதைதொடர்ந்து அழகப்பனுக்கு சொந்தமான சிவகங்கை, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. குற்றவாளி அழகப்பன் மகன் சிவா(எ) சதீஷ் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகிறார். இதனால் அழகப்பன் தனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று சந்தேக்கின்றனர். எனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் அழகப்பனுக்கு அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடிகை கவுதமியின் சொத்துக்கள் மோசடி விவகாரம் முக்கிய குற்றவாளி அழகப்பன், மனைவிக்கு லுக்அவுட் நோட்டீஸ்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gauthami ,Alagappan ,Central Crime Branch ,Chennai ,Gautami ,
× RELATED மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்