×

சிவகாசி குழந்தை திருச்சியில் விற்பனை: தாய், தந்தை உட்பட 6 பேர் மீது வழக்கு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி அருண்குமார் (34). இவரது மனைவி மகாலட்சுமி (30). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இதில் 2வது ஆண் குழந்தை கடந்த 16.6.2021ல் நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து மகாலட்சுமி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெடி விபத்து ஒன்றில் கையில் காயம் ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமலும் குழந்தைகளை வளர்க்க முடியாமலும் அருண்குமார் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் அருண்குமார், கடந்த ஆண்டு தனது 2வது மகனை திருச்சியை சேர்ந்த சுப்பிரமணி, நாகராஜ் ஆகியோர் மூலம் திருச்சி துறையூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்த செல்வம் – சந்திரா தம்பதிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த அதிகாரிகள் சந்தேகம் அடைந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விருதுநகர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தந்தை அருண்குமார், தாய் மகாலட்சுமி, குழந்தையை வாங்கிய திருச்சி செல்வம் (54), அவரது மனைவி சந்திரா (52), குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி நாகராஜ், கார் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 6 பேர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சிவகாசி குழந்தை திருச்சியில் விற்பனை: தாய், தந்தை உட்பட 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Trichy ,Arun Kumar ,Muneeswaran Colony ,Sivakasi, Virudhunagar district ,Mahalakshmi ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை