×

திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

சிங்கம்புணரி, நவ.22: சிங்கம்புணரி நகரில் பெரிய கடை வீதி காரைக்குடி ரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் இச்சாலையில் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள், உணவகங்கள் ஜவுளிக்கடைகள், முன்பு சாலை ஓரங்களில் கார், கனரக வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து அரணத்தாங்குண்டு வரை சர்வீஸ் சாலை இருபுறமும் பழங்கள் விற்பனை வண்டிகள், துரித உணவகங்கள் மற்றும் டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

சாலையோர வியாபாரிகளிடம் கடை உரிமையாளர்கள் கடைகளில் முன்பு வியாபாரம் செய்வதற்கு உள் வாடகை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது. இதனால் காரைக்குடி திண்டுக்கல் சாலை அகலம் குறைந்து அடிக்கடி வாகன விபத்துகள் தொடர் கதையாக உள்ளது. சாலை இருபுறமும் சர்வீஸ் சாலைகளில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நான்கு ரோடு சந்திப்பு, கிருங்காகோட்டை விலக்கு இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கவும், பேருந்து நிலையம் பகுதி, பெரிய கடை வீதிகளில் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சாலைகளில் முறையற்று வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் இதனால் நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் விபத்தில் காயம் அடைந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

The post திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dindigul-Karaikudi road ,Singampunari ,Periya Kada Road ,Karaikudi Road ,
× RELATED களைகட்டிய மஞ்சுவிரட்டு