×

திருப்பத்தூரில் இன்று சிறப்பு முன்னோடி முகாம்

சிவகங்கை, நவ.22: திருப்பத்தூரில் இன்று மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தின் கீழ், சிறப்பு முன்னோடி முகாம் நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதிய திட்டமான மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில், இன்று காலை 9 மணியளவில் தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு முன்னோடி முகாம் நடைபெறவுள்ளது.

இதில், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 18வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு, மனுக்களை உரிய ஆவணங்களுடன் வழங்கலாம். இச்சிறப்பு முகாமில், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான மனுக்கள், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, சொத்து வரி மதிப்பீடு, பட்டா மாறுதல், உட்பிரிவு, சாதி மற்றும் பிற சான்றுகள், வீட்டுமனைகள் கோரிக்கை மனு, நில அபகரிப்பு, நில மோசடி, போக்சோ மற்றும் பிற மனுக்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, தாட்கோ கடன்,

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கழக வாழ்வாதாரக் கடன்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை தொடர்பிலான கோரிக்கை மனுக்கள் பெறப்படும். எனவே, இச்சிறப்பு முன்னோடி முகாமில், பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திருப்பத்தூரில் இன்று சிறப்பு முன்னோடி முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Sivagangai ,Tirupattur ,Tirupathur ,
× RELATED வேலூர், தி.மலை, திருப்பத்தூரில் கொட்டி...