×

பொது வினியோக திட்டத்திற்காக 6 கோடி பாமாயில் பாக்கெட் கொள்முதல் எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லிட்டர் அளவில் 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் செய்வதற்காக நவம்பர் 8ம் தேதி மின்னணு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி மதுரையைச் சேர்ந்த தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளின்படி 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பாமாயில் டெண்டருக்கு விண்ணப்பிக்க நவம்பர் 8ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதற்கு சட்ட விதிகள் அனுமதி வழங்குகின்றன என்று விளக்கமளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அவசர தேவைக்காக குறுகிய கால டெண்டர் கோர விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று தான் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

 

The post பொது வினியோக திட்டத்திற்காக 6 கோடி பாமாயில் பாக்கெட் கொள்முதல் எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...