×

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அங்கு வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் காங்கிரசுக்கும் பாஜ.வுக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. இம்மாநில தேர்தலுக்கான பாஜ.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 16ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா, தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவர் சி.பி. ஜோஷி மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் வெளியிட்டனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், பஞ்சாயத்து அளவிலான தேர்வில் பஞ்சாயத்து ராஜ் போன்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சிரஞ்சீவி மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஓராண்டு வழங்கப்படும் ரூ.25 லட்சம் இரட்டிப்பாக ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.5 லட்சம், கூட்டுறவு வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். மக்கள்தொகையின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். தற்போது 125 நாட்களாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

மேலும், முதல்வர் கெலாட் ஏற்கனவே அறிவித்திருந்த 7 உத்தரவாத திட்டங்களும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை, 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500 விலையில் எல்பிஜி எரிவாயு சிலிண்டர், கால்நடை வளர்ப்போரிடம் இருந்து கிலோ ரூ.2க்கு மாட்டு சாணம் கொள்முதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான சட்டம், அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப் டாப் மற்றும் டேப், இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் காப்பீடு மற்றும் ஆங்கில வழிக்கல்வி உள்பட 7 உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajasthan Cong ,Jaipur ,Congress party ,Rajasthan ,Chief Minister ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி...