×

அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறப்பாக வளர மாநில முதல்வர்களே வேந்தராக இருக்க வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறப்பாக வளர மாநில முதல்வர்களே வேந்தராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதேபோல், மதிப்புறு முனைவர் பட்டத்தை திரையிசை பின்னணி பாடகி சுசீலாவிற்கும், மதிப்புறு முனைவர் பட்டத்தை கர்நாடக இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக்கலைஞர் பி.எம்.சுந்தரத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் மணிவாசன், துணைவேந்தர் சவுமியா, பதிவாளர் சிவசவுந்தரவள்ளி, கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இசைக்கும், என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர். அதேபோலதான், கலைஞரும் கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்களை கூட எழுதி இருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர் பாட்டு பாடுவது இல்லையே தவிர, அனைத்து இசை நுணுக்கங்களும் அவருக்கு நன்றாக தெரியும். இசையை கேட்டவுடனே, அதில் சரி எது, தவறு எது என்று சொல்லிவிடுவார். அந்தளவுக்கு வல்லமை பெற்றிருந்தார். அடுத்து, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா சிதம்பரம் ஜெயராமன் தான். அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை உண்டு. முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக்கழகம் இருக்கிறது.

இந்த பல்கலை கழகத்துக்குத்தான், மாநிலத்தை ஆளும் முதல்வரே வேந்தராக இருக்கின்ற உரிமை இருக்கிறது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை. எதார்த்ததைதான் பேசுகிறேன். இன்றைக்கு இசைப்பல்கலைக்கழகத்தின் சார்பில், பத்மபூஷன் பி.சுசீலா, பி.எம். சுந்தரம் என இரண்டு இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறோம். பாடகி சுசீலா குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்கவே இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட புகழை பெற்ற பாடகி. அதேபோல், இசையில் அறிஞர் பி.எம்.சுந்தரம் பன்முகத் திறமை கொண்டவர். மிகப் பெரிய இசை மரபில் பிறந்து, இசைத் துறைக்கு அரிய தொண்டாற்றி வருபவர். மங்கல இசை மன்னர்கள், மரபு தந்த மாணிக்கங்கள் போன்ற இசைத் துறையில் முக்கியமான நூல்களை படைத்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக கலைஞர் மனதில் இடம் பிடித்தவர். மேலும், நம்முடைய தஞ்சை மண்ணைச் சார்ந்தவர். தற்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினுடைய முதல்வராக நான் இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருப்பதால்தான் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற வகையில் இது போன்ற முடிவுகளை எடுக்க முடிகிறது. அதனால் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்காக சட்ட முன்வடிவுகளையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றது. அதில், நல்ல செய்தி வரும். வரும் என்று எதிர்பார்ப்போம். வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில் இந்த வழக்கில் நீதிபதிகள் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். இப்படி மாற்றினால் தான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்டமுடியும். நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்துத்தான் சொல்கிறேன். அதேபோல், கல்வி தான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. நலிந்த நிலையில் இருக்கின்ற மரபுவழிக் கலைகள், பண்டைய தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிக்கின்ற கலைகள், அந்தக் கலைகளை உயிர்ப்பித்து, வருங்கால தலைமுறைகளுக்கு கொண்டு செல்கின்ற முயற்சிகளில் இந்தப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள் பலர், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இசை மற்றும் கவின்கலைகளை பயின்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வகையில், சமூகநீதியைக் காக்கின்ற பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது.

மேலும், இசை, நாடகத்துறை, திரைப்படத்துறை போன்றவற்றுடன் வளர்ச்சிக்கு, தமிழக முதல்வராக இருந்த கலைஞருடைய பங்களிப்பு மகத்தானது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக இருக்கின்ற திருவையாறு அரசு இசைக் கல்லூரியை கடந்த 1997ம் ஆண்டு தோற்றுவித்தவர் கலைஞர். அதே ஆண்டு கிராமப்புற மாணவர்களும், இசைப் பயிற்சி பெற ஏதுவாக, 17 மாவட்டங்களில் 17 இசைப் பள்ளிகளை தோற்றுவித்தார். குறிப்பாக, மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய “நீராரும் கடலுடுத்த” பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அனைத்து அரசு விழாக்களிலும் இசைக்க வேண்டும் என்று கடந்த 1970ம் ஆண்டே அரசாணையை பிறப்பித்தவர் கலைஞர். முதன்முறையாக இந்த பட்டமளிப்பு விழாவில், ஆராய்ச்சிப் பட்டங்கள் (Ph.D) வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியான டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முதன்முறையாக B.V.A பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 3500 மாணவர்களுக்கு Ph.D., M.Phil, P.G, U.G, Diploma சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

நாட்டார் கலைகள், வில்லுப்பாட்டு, சவுண்ட் இன்ஜினியரிங், மியூசிக் தெரபி மற்றும் வாய்ஸ் ரிலேட்டட் கோர்ஸ்கள் என்று புதுமையான படிப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியன் தியேட்டர் ஆட்ஸ் ஃபார் இண்டிகிரேட் டேவலப்மெண்ட் என்ற சமுதாயத்திற்கு பயனளிக்கும் படிப்பு தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் தற்போது மார்கழி இசை விழாக்கள் மற்றும் அரசு விழாக்களில் பங்கேற்கின்ற வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் இசைக்கும், தமிழ்ப் பாடல்களுக்கும் எல்லோரும் அதிக முக்கியத்துவம் தரவேண்டும்; அதற்கு இசைப் பல்கலைக்கழகம் ஊக்கமளிக்க வேண்டும். குறிப்பாக, பழந்தமிழ் இசை நூல்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். புதிய இசை நூல்கள் எழுதப்படவேண்டும். இதில் எல்லாம் இந்த பல்கலைக்கழகம் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கலைஞர்களே கலையை வளர்ப்பீர். கலை மூலமாக தமிழைக் காப்பீர். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

The post அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறப்பாக வளர மாநில முதல்வர்களே வேந்தராக இருக்க வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Mu. K. Stalin ,Chennai ,K. Stalin ,
× RELATED பொய்களால் சூரியனை ஒருபோதும் மறைக்க...