×

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல: நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும்.. இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தல்..!!

சென்னை: நடிகை திரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது; கதாயநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறித்துதான் பேசினேன். நான் மன்னிப்பு கேட்பவன் இல்லை. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறை செய்துள்ளது. நான் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகை திரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இயக்குநரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது.

ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை. சில மேடைகள்… சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை… நாவைப் புரட்டிப்போடும்.

நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது. நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஒரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.

இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சக கலைஞர்களைப் பற்றி பேசும் போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு.

எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள… பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும்.

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம். கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கத்துடனோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.” என கூறியுள்ளார்.

The post மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல: நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும்.. இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Bharathiraja ,Chennai ,Trisha ,
× RELATED வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி...