×

உத்தராகண்ட் சுரங்க விபத்து .. எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு: முதல் வீடியோ வெளியீடு

டேராடூன்: உத்தராகண்டில் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ வெளியாகி உள்ளது. சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா பகுதியில் மலையை குடைந்து 4.5 கிமீ தொலைவுக்கு சுரங்க சாலை அமைக்கும் பணி நடந்தது. கடந்த 12ம் தேதி திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி 10வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில், பைப் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கேமரா மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை ஒவ்வொருவராக கேமரா முன் வரச்சொல்லி அடையாளம் கண்டு வாக்கி டாக்கி மூலம் மீட்புக் குழு பேசியுள்ளது. சுரங்கப்பாதைக்குள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் தங்கள் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது பைப் மூலம் முதன்முறையாக சூடான உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணாடிக் குடுவைகளில் சுடச்சுட கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அவர்களுக்கு உலர் கொட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே தொழிலாளர்களுக்கு விரைவில் மொபைல் போன்களும் சார்ஜர்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உத்தராகண்ட் சுரங்க விபத்து .. எண்டோஸ்கோபி கேமரா மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு: முதல் வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Mining Accident ,Dehradun ,Uttarakhand ,Uttarakhand Mining Accident Rescue ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ