×

கஞ்சா மற்றும் செல்போன்களின் புழக்கத்தை தடுக்க 9 மத்திய சிறைகளை ‘டிரோன்’ மூலம் கண்காணிக்க முடிவு: தமிழக சிறைத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் புழல்-1, புழல்-2. வேலூர், கடலூர், சேலம், பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் அமைந்துள்ளது. இந்த சிறைகளில் கொடும் குற்றவாளிகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் உள்ளனர். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில், கைதிகள் சிலர் சிறை வளாகத்தில் சாராயம் காய்ச்சி குடித்தது, பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவங்கள் நடந்தது.

அதேபோல் சிறை வாசிகளை பார்க்க வரும் உறவினர்கள் கஞ்சா மற்றும் செல்போன்களை மறைத்து கொண்டு வந்து கைதிகளிடம் கொடுப்பதும், சில நேரங்களில் சிறை மதில் சுவர் வழியாக சிறு பொட்டலங்களாக கஞ்சாவை சிறை வாசிகளுக்கு வீசிய சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும், சிறையில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், சிறையில் முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் வெளிநாட்டு கைதிகளின் செல்பாடுகள் குறித்து அறியும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்பேரவையில் மத்திய சிறைகளில் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள சென்னை புழல் உட்பட 9 மத்திய சிறைகளில் கஞ்சா, செல்போன்கள் மற்றும் சிறை கைதிகளின் செயல்பாடுகளை அறிய ‘டிரோன்’ மூலம் கண்காணிக்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் வழங்கப்பட்டது. அதற்கான அனுமதி தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. அதை தொடர்ந்து, 9 மத்திய சிறைகளுக்கு ‘டிரோன்கள்’ கொள்முதல் செய்ய சிறைத்துறை முடிவு செய்து, அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு சிறைக்கு 2 முதல் 3 டிரோன்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அந்தந்த சிறைத்துறை வளாகத்திலேயே பிரிவு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் 9 மத்திய சிறைகளில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு நடவடிக்கையால் சிறையில் கஞ்சா, செல்போன்கள் முற்றிலும் ஒழிக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

The post கஞ்சா மற்றும் செல்போன்களின் புழக்கத்தை தடுக்க 9 மத்திய சிறைகளை ‘டிரோன்’ மூலம் கண்காணிக்க முடிவு: தமிழக சிறைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Jails ,Tamil Nadu Prison Department ,Chennai ,Puzhal-1 ,Puzhal-2 ,Tamil Nadu ,Vellore ,Cuddalore ,Salem ,Balayankottai ,Madurai ,Trichy ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...