×

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்க பசை பறிமுதல்: தப்பியோடிய ஆசாமிக்கு வலை; விமான நிலைய ஊழியர் கைது

சென்னை: துபாயிலிருந்து ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.5 கிலோ தங்க பசையை, சென்னைக்கு கடத்தி வந்த பயணியை சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை, டிரான்சிட் பயணிகளின் கழிவறைக்குள் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் மேப்லீன் (32) என்பவர் சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார். இதை கண்காணித்த விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், மேப்லீனை ரகசியமாக பின் தொடர்ந்தனர். அப்போது மேப்லீன், சர்வதேச முனையத்தில் இருந்து வெளியில் வந்து, உள்நாட்டு முனையம் 1க்கு சென்றார். சுங்க அதிகாரிகள் அவரை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் 1.5 கிலோ எடையுள்ள தங்கப் பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம்.

தொடர்ந்து சுங்க அதிகாரிகள் மேப்லீனை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், இந்த தங்கப் பசையை கடத்தி வந்து, டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்த தங்கப் பசை பார்சலை மேப்லீன் எடுத்துக் கொண்டு வந்து, உள்நாட்டு முனையத்தில் நிற்கும் கடத்தல் பயணியிடம் கொடுக்கக் கொண்டு வந்தார் என்று தெரிய வந்தது. ஆனால் மேப்லீன், சுங்கத்துறையினரிடம் சிக்கிக்கொண்டார் என்று தெரிந்ததும், அந்த கடத்தல் பயணி தப்பி ஓடி விட்டார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம், துபாயிலிருந்து தங்க பசையை கடத்தி வந்த பயணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்க பசை பறிமுதல்: தப்பியோடிய ஆசாமிக்கு வலை; விமான நிலைய ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai ,Dinakaran ,
× RELATED துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை...