×

செவிலிமேடு அருகே பாலாறு மேம்பாலத்தில் சேதமடைந்த தார்சாலை: சீரமைக்க வேண்டுகோள்

காஞ்சிபுரம்: செவிலிமேடு அருகே பாலாறு மேம்பாலத்தில் மீண்டும் சேதமடைந்த தார்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தை தொட்டு செல்லும் பாலாற்றில், களக்காட்டூர், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு ஓரிக்கை கீழ் சாலை, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செவிலிமேடு மேல் சாலை ஆகிய 2 பகுதிகளில் தலா 1 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் சாலை வழியாக அதாவது செய்யாறு, வந்தவாசி சாலை மிகவும் பிரதான சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் ஏராளமான வாகனங்கள் இந்த பாலம் வழியாக கடந்து செல்கின்றன.

மேலும், புஞ்சையரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால் அதிகளவில் டூவீலர்களில் வந்து செல்கின்றனர். மேலும் காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இந்த தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும்.இந்நிலையில் பாலத்தின் இணைப்பு பகுதிகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு அச்சுறுத்தும் வகையில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. இதனால் வாகனங்கள் சேதம் அடைவதுடன், டூவீலரில் செல்வோர் அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து சென்றனர்.  இதுகுறித்து தொடர்ந்து நமது தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 1 கி.மீ நீளமுள்ள மேம்பாலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது.

இந்த மேம்பாலத்தின் வழியாக திருவண்ணாமலை மாவட்டம், ஆக்கூர், நேத்தபாக்கம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் கருங்கல், எம் சாண்ட், சரளை மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வதால் சாலையின் இடது பக்கம் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை மீண்டும் சேதம் அடைந்துள்ளது. பருவமழைக் காலம் தொடங்கி உள்ளதால், தார்சாலை முழுமையாக சேதம் அடைவதற்குள் அதனை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post செவிலிமேடு அருகே பாலாறு மேம்பாலத்தில் சேதமடைந்த தார்சாலை: சீரமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Palaru ,Sewilimedu ,Kanchipuram ,Sevilimedu ,Dinakaran ,
× RELATED பிளஸ் 1 மாணவனுக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது