×

தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடந்த சோதனை எதிரொலி; நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்: 10 மாவட்ட ஆட்சியாளர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்த முடிவு

சென்னை: அதிமுக ஆட்சியின் போது நடந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி பெரிய அளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம், திருச்சி மற்றும் வேலூரில் இயங்கி வரும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக பிரபல தொழிலதிபர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோர் உள்ளனர்.

மணல் ஒப்பந்த குவாரிகளில் வரும் வருமானத்தை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் அதிமுக ஆட்சியின் போது போலி பில்கள் மூலம் பல கோடி மதிப்புள்ள கனிமவளமான மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் மூலம் பல கோடி ரூபாய் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் பல அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அதிமுக ஆட்சியின் போது மணல் குவாரிகள் நடந்த மாவட்டங்களில் பணியாற்றிய 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோருக்கு மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து இன்று நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியுள்ளார்.

அவரிடம் அதிமுக ஆட்சியின் போது, மணல் குவாரிகள் ஒப்பந்தம் கோரப்பட்ட புள்ளிவிபரங்கள், எத்தனை மெட்ரிக் டன் மணல் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் மற்றும் சோதனையின் போது மணல் குவாரி அதிகாரிகள் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு விபரங்கள் மூலம் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்ட 10 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.அதிமுக ஆட்சியின் போது நடந்த மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை மூத்த அதிகாரி ஒருவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் நடந்த சோதனை எதிரொலி; நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்: 10 மாவட்ட ஆட்சியாளர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Engineer of ,Water ,Resources Department ,Muthiah ,Enforcement Department ,District Governors ,CHENNAI ,Enforcement ,AIADMK ,10 District ,Governors ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக...