×

சங்கரய்யா படத்திறப்பு: அமைதி ஊர்வலம்: செங்கல்பட்டில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு


செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று மா.கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் மறைவை முன்னிட்டு, அவரது படத்திறப்பு விழா மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதுபெரும் சுதந்திர போராட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், தகைசால் தமிழர் விருது பெற்ற என்.சங்கரய்யாவின் மறைவை முன்னிட்டு, நேற்று செங்கல்பட்டு, ராட்டினங்கிணறு பகுதியில் அமைதி ஊர்வலம் மற்றும் அவரது திருவுருவப் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மா.கம்யூ முன்னாள் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக செங்கல்பட்டு, ராட்டினங்கிணறு பகுதியில் இருந்து, அங்குள்ள மாவட்ட மா.கம்யூ கட்சி அலுவலகம் வரை மறைந்த சங்கரய்யாவின் நினைவைப் போற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அங்குள்ள மாவட்ட மா.கம்யூ கட்சி அலுவலகத்தில், சங்கரய்யாவின் படத்திறப்பு விழா நடைபெற்றது. அங்கு மறைந்த சங்கரய்யாவின் திருவுருவப் படத்தை மா.கம்யூ கட்சியின் முதுபெரும் தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர் பி.விஸ்வநாதன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் க.அன்புச்செல்வன்,

நகர செயலாளர் ச.நரேந்திரன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், விசிக மண்டல செயலாளர் சூ.க.விடுதலைசெழியன், மாவட்ட செயலாளர் கனல்விழி, மா.கம்யூ மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், சிபிஐ மாவட்ட செயலாளர் எ.ராஜ்குமார், சிபிஐஎம் எல்லிபரேசன் மாவட்ட செயலாளர் சொ.இரணியப்பன், பாமக வர்க்க சமரனணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் வல்லம் வி.கோபி, தி.க. மாவட்ட செயலாளர் எ.செம்பியன், மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், மாவட்ட செயலாளர் முகம்மது யூனுஸ் உள்பட பலர் பங்கேற்று பேசினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post சங்கரய்யா படத்திறப்பு: அமைதி ஊர்வலம்: செங்கல்பட்டில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Communist Party ,Sankaraya ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்