×

ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 

ஈரோடு, நவ.20: ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். ஈரோடு திண்டல் மலையில் வேலாயுதசாமி (முருகன்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு வந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் கடைபிடித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் முருகன் சிறப்பு அலங்காரத்துடன் தோன்றி சூரபத்மனை வதம் செய்தார். இவ்விழாவினையொட்டி நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. இதில் வள்ளி, தெய்வானையுடன் சமேத வேலாயுதசாமியின் உற்சவ சிலைகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் கோயில் வளாகத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து வேலாயுதசாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மேளதாளங்கள் முழங்க வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியின் கிரிவலம் நடந்தது. இதேபோல், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், முனிசிபல்காலனி பாலமுருகன் கோயில், சென்னிமலை சாலை மலேசியா முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

The post ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thirukalyana Utsavam ,Erode Dindal Murugan Temple ,Erode ,Lord ,Murugan.… ,
× RELATED தொட்டியம் அருகே நாகையநல்லூரில் சீதாராமன் திருக்கல்யாண உற்சவம்