×

இன்ஸ்டாகிராம் அழகியை கொலை செய்ய அதிமுக கவுன்சிலரிடம் சயனைடு வாங்கிய பூசாரி: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

சேலம்: சேலம் அருகே இன்ஸ்டாகிராம் அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில், இதற்காக அதிமுக கவுன்சிலரிடம் பூசாரி சயனைடு வாங்கிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38), கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (28). இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வி மாயமானார்.

தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் அழகி செல்வி, சேலம் இரும்பாலை அருகே பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே முட்புதரில் இறந்து கிடந்தார். அவரை, பெரியாண்டிச்சி அம்மன் கோயில் பூசாரி குமார் (42), குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து, முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து பூசாரி குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர், குழந்தை பாக்கியத்திற்காக குறி கேட்க வந்த செல்வியிடம் நெருங்கி பழகினேன், அவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் வாங்கி கொண்டு திருப்பி தரவில்லை. இதனால் 15ம் தேதியன்று அவரை வரவழைத்து ஆசைக்கு இணங்கும்படி கூறியதற்கு மறுத்தார். அதனால் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை எடுத்துக்கொண்டு, உடலை முட்புதரில் போட்டேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் வேறு காரணம் மறைந்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக செல்வியும், பூசாரி குமாரும் குறைந்த விலைக்கு தங்க காசு வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதில், லட்சக்கணக்கில் இருவரும் பணத்ைத கொடுத்து, வாங்கி வந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து ஐம்பொன் காசுகளாக வாங்கி வந்ததாகவும், அதனை பலருக்கு விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த தொழிலில் ஏற்பட்ட பிரச்னையில் தீர்த்துக்கட்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், சம்பவத்தன்று செல்வி கோயிலுக்கு வந்தபோது, பூசாரியின் நண்பர்கள் சிலர் அங்கிருந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் தான், செல்வியை தனது வீட்டிற்கு பூசாரி குமார் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனிமையில் இருக்க முயற்சித்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டினாரா? அல்லது நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சிசெய்து அதில் ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டினரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதேவேளையில், சயனைடு கொடுத்து கொன்றிருப்பதால், செல்வியை கொலை செய்ய வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டு சயனைடை வாங்கி வைத்திருந்துள்ளார். அதனால், இக்கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என போலீசார் கருதுகின்றனர். சயனைடு எப்படி கிடைத்தது என பூசாரி குமாரிடம் போலீசார் விசாரித்தனர்.

சம்பவத்திற்கு முந்தையநாள் பெரும்மாம்பட்டி பகுதியில் வெள்ளி பட்டறை நடத்தி வரும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஒருவரிடம் ரூ.1,500 கொடுத்து சயனைடை பூசாரி குமார் வாங்கி வந்துள்ளார். அதிமுக கவுன்சிலரிடம், கோயில் பகுதியில் நாய் தொல்லை அதிகளவு இருக்கிறது, அதனால் நாய்களை கொல்ல சயனைடு வேண்டும் எனக்கேட்டு வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வழக்கை சேலம் இரும்பாலை போலீசுக்கு மாற்றி அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனிடையே கைதான பூசாரி குமாரை ஓமலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post இன்ஸ்டாகிராம் அழகியை கொலை செய்ய அதிமுக கவுன்சிலரிடம் சயனைடு வாங்கிய பூசாரி: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : cyanide ,AIADMK ,Instagram ,Bagheer ,Salem ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...