×

தமிழ்முறைப்படி திருமணம் நடந்தது அமெரிக்க பெண்ணை மணந்த தஞ்சை வாலிபர்: திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர்: அமெரிக்க பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி தஞ்சாவூர் வாலிபர் நேற்று திருமணம் செய்து கொண்டார். அப்போது திருக்குறள் வாசித்து மணமகன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (35). இன்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னி டிக்சன் (35). எம்.ஏ. சைக்காலஜி படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சங்கரநாராயணன்- அன்னி டிக்சன் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதுபற்றி, சங்கரநாராயணன், தஞ்சாவூரில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் மகனின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். இதைபோல் அன்னி டிக்சனின் பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை சங்கரநாராயணன் – அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது. இதில், சங்கரநாராயணன் பெற்றோர், உறவினர்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர். தமிழில் வேத மந்திரங்கள் ஓதி தமிழ்முறைப்படி திருமணம் நடைபெற்றது. மேலும் மணமகன் சங்கரநாராயணன், திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். விழாவில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ் பாரம்பரியப்படி வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடல் கடந்து காதலித்தாலும் அதனை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்த மணமக்களின் பெற்றோரை அனைவரும் பாராட்டினர்.

The post தமிழ்முறைப்படி திருமணம் நடந்தது அமெரிக்க பெண்ணை மணந்த தஞ்சை வாலிபர்: திருக்குறள் வாசித்து உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...