×

சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளம் பெண்களை வழிமறித்து பாலியல் தொந்தரவு: 200 சிசிடிவி கேமரா ஆய்வு மூலம் பைக் டாக்சி ஓட்டுநர் கைது

சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்த பிரபல பைக் டாக்சி நிறுவன ஓட்டுநர் ஒருவரை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர். கடந்த 3 மாதங்களில் 50க்கும் மேற்பட்டோரை பைக்கில் வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது 13 வயது மகள் வீட்டின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு டியூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென எனது மகளை வழிமறித்து சிறுமியை தவறான நோக்கத்தில் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தும், உடலில் பல இடங்களில் அறுவறுக்கத்தக வகையில் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் வலி தாங்க முடியாமல் எனது மகள் வீட்டிற்கு வந்து என்னிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். எனவே எனது மகளிடம் தவறான நோக்கத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் படி கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி விரைந்து நடவடிக்கை எடுக்க டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று ஆய்வு செய்தனர். அப்போதுதான், வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து டியூசன் சென்று தனியாக வீடு திரும்பிய சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. ஆனால், அவர் ஓட்டி வந்த பைக் பதிவு எண் சரியாக தெரியவில்லை. இதனால் போலீசார் மர்ம நபரை பிடிக்க கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்து பைக் பதிவு எண்ணை கண்டு பிடித்தனர். பின்னர், அதை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அது டி.பி.சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன்(24) என்பவருக்கு சொந்தமான பைக் என தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அதிரடியாக யோகேஸ்வரன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சிறுமியிடம் தவறாக நடந்து சென்ற மர்ம நபர் பயன்படுத்திய பைக் வீட்டில் இருந்தது. அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் யோகேஸ்வரனை அதிரடியாக கைது செய்தனர். அவர் குற்றத்திற்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் யோகேஸ்வரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் கடந்த ஆண்டு நசரத்பேட்டையில் 100 நாட்கள் என்ற தொடர் நடத்தும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பணியாற்றி வந்துள்ளார். யோகேஸ்வரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். அதன்பிறகு வேலையில்லாமல் இருந்துள்ளார். பிறகு பிரபல பைக் டாக்சி நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களாக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
ஆன்லைன் பதிவு மூலம் யோகேஸ்வரன் பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.

இவர் இரவு நேரத்தில் தான் அதிகளவில் பைக் டாக்சி ஓட்டியுள்ளார். அந்த நேரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் இளம் பெண்கள் பைக் டாக்சி புக் செய்து இவருடன் செல்லும் போது, தேவையில்லாத இடங்களில் பிரேக் படித்து, பின்னால் பைக்கில் அமர்ந்து வரும் இளம் பெண்ணை தனது உடல் மீது மோதும் படி செய்து வந்துள்ளார். அப்போது சில பெண்கள் இவரை கண்டித்துள்ளனர்.

சிலர் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். அப்படி கண்டிக்கும் சில பெண்களிடம், இவர் மன்னிப்பு கேட்டு தந்திரமாக பேசி தப்பி வந்துள்ளார். அப்படி பைக் டாக்சி ஓட்டும்போது, நள்ளிரவு நேரத்தில் தனியாக சாலையில் செல்லும் இளம் பெண்களை நோட்டமிட்டு, அவர்களை பின் தொடர்ந்து சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத போது, பெண்களை வழிமறித்து, கட்டிபிடித்து முத்தம் கொடுத்தும், உடலில் பல இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துவிட்டு, இதுகுறித்து வெளியில் சொன்னால் உங்களுக்கு தான் பிரச்னை என்று மிரட்டி அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.

இதுபோல் கடந்த 3 மாதங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் 50க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பைக் டாக்சி புக் செய்து தன்னுடன் வரும் சில பெண்களை ஒன்றும் தெரியாதபடி அவர்களை தொடும்போது, அவர்கள் கண்டுக்கவில்லை என்றால், அவர்களின் செல்போன் நம்பருக்கு இரவு நேரத்தில் மெசேஜ் செய்து, அவர்களுடன் நட்பை ஏற்படுத்தி நெருக்கமாக இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 3 மாதங்களாக இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எந்த இளம் பெண்களும் போலீசில் புகார் அளிக்காததால், இதுபோன்ற சம்பவங்களில் தொடந்து ஈடுபட்டு வந்ததுள்ளார். அதன்படி தான் கடந்த வெள்ளிக்கிழமை டியூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து சென்ற சிறுமியிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததால், அவர் மிகவும் பாதிக்கப்பட்டும், வலி தாங்க முடியாமல் தனது பெற்றோரிடம் கூறியதால் தான் தற்போது போலீசில் சிக்கி கொண்டதாக விசாரணையின்போது, யோகேஸ்வரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானயோகேஸ்வரன் 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கு, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அனைத்து மகளிர் போலீசார் யோகேஸ்வரனிடம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக நடந்து செல்லும் இளம்ெபண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்த குற்றவாளியை புகார் அளித்த 8 மணி நேரத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளம் பெண்களை வழிமறித்து பாலியல் தொந்தரவு: 200 சிசிடிவி கேமரா ஆய்வு மூலம் பைக் டாக்சி ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!