×

வேப்பம்பட்டு ரயில்நிலையம் அருகே மின்சார ரயில் மோதி தந்தை 2 மகள்கள் பரிதாப பலி: தண்டவாளத்தை கடந்தபோது சோகம்; மக்கள் மறியல்

திருவள்ளூர்: வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்த தந்தை மற்றும் 2 மகள்கள் ஆகிய 3 பேர் மீது மின்சார ரயில் மோதியதில் பரிதாபமாக பலியாகிவிட்டனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (48). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனைவியை பார்ப்பதற்காக, தனது 2 மகள்களான தர்ஷினி (18), தாரணி (17) ஆகியோரை அழைத்துக் கொண்டு வேப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கு மனோகர் சென்று கொண்டிருந்தார். இவர்கள் 3 பேரும் ரயில்நிலையத்தை ஒட்டிய தண்டவாளப் பகுதியை கடக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயில், தண்டவாளத்தை கடந்த தந்தை மற்றும் 2 மகள்கள் மீது வேகமாக மோதியது. இதில் 3 பேரும் சம்பல இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகிவிட்டனர். தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த 3 பேரின் சடலங்களை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு, அங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, திருவள்ளூர் – ஆவடி நெடுஞ்சாலையில் அமர்ந்து, திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், மந்தகதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post வேப்பம்பட்டு ரயில்நிலையம் அருகே மின்சார ரயில் மோதி தந்தை 2 மகள்கள் பரிதாப பலி: தண்டவாளத்தை கடந்தபோது சோகம்; மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Weppampattu railway ,Thiruvallur ,Veppampattu railway station ,Weppampattu railway station ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்