×

போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் சாலையில் தோன்றிய திடீர் பள்ளம்

போச்சம்பள்ளி, நவ.19: போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றங்கரை வழியாக செல்லும் சாலை வாடமங்கலம், பண்ணந்தூர், சந்தனூர், தாமோதரஅள்ளி மற்றும் காரிமங்கலத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. வழிநெடுகிலும் விவசாயம் நடைபெற்று வருகிறது. போச்சம்பள்ளி, காரிமங்கலம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, இந்த வழியாக விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை பல்வேறு இடங்களில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு காய்கறி- பூக்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று பகுதியில் இருந்து வாடமங்கலம் செல்லும் வழித்தடத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை நடுவே, பல்வேறு இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை அறியாமல் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலை அமைந்து சில நாட்களேயான நிலையில், பல்வேறு இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீர்செய்து, சீரான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் சாலையில் தோன்றிய திடீர் பள்ளம் appeared first on Dinakaran.

Tags : Vadamangalam ,Bochampalli ,Bochambally ,
× RELATED போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய...