×

ஐகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு கோரி வழக்கு டிசம்பர் 4ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், உயர் நீதிமன்ற கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு 2015 நவம்பர் மாதம் முதல் போடப்பட்டுள்ளது. தொழில் பாதுகாப்பு படையினர் அமைத்துள்ள 5 வாயில்கள் வழியாக சோதனைக்கு பிறகு வழக்கறிஞர்களும், வழக்கு தொடர்பவர்களும், நீதிமன்ற ஊழியர்களும், பத்திரிகையைாளர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அனுமதி சீட்டு பெற தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் கடந்த 2020ல் ஒரு மனுவை தாக்கல் செய்தார். மனுவில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றங்கள், செஷன்ஸ் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் மற்றும் சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள் உள்ளன.
இந்த நீதிமன்றங்களுக்கு தினமும் ஏராளமான சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்ட விசாரணை கைதிகள் வருகிறார்கள்.

சில நேரங்களில் இவர்களிடையே கைகலப்பு, தகராறு ஏற்படுகிறது. குடும்ப நல நீதிமன்றத்துக்கு வழக்குக்காக வரும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுகின்றன. உயர் நீதிமன்ற வளாகத்தில் கத்திக்குத்து சம்பவமும் நடந்துள்ளது. எனவே, உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் அனைத்து வாயில்களிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கனவே உள்ள பாதுகாப்பை வளாகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை டிசம்பர் 4ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post ஐகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு கோரி வழக்கு டிசம்பர் 4ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : CISF ,CHENNAI ,Central Industrial Security Force ,Chennai High Court ,
× RELATED திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு...