×

ரூ3,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு; பி.எல்.ஐ திட்டத்தில் கணினி ஹார்டுவேர் தயாரிப்பு: 27 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல்


புதுடெல்லி: ஒன்றிய அரசின் பிஎல்ஐ திட்டத்தில் கணினி ஹார்டுவேர் தயாரிக்க 27 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக பி.எல்.ஐ. என்ற உற்பத்தி இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த 2020 ஏப்ரலில் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதன் கீழ் மொபைல் போன் உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு திட்டம் வெற்றி அடைந்தது. அதையடுத்து, பி.எல்.ஐ-2.0 என்ற இரண்டாம் கட்ட திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மே 17ல் அறிவித்தது. இத்திட்டத்தின்படி டெல், எச்.பி, பிளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், வி.வி.டி.என், ஆப்டிமஸ், பாட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ், சோஜோ, குட்வொர்த், நியோலிங், சிர்மா எஸ்.சி.எஸ், மெகா நெட்வொர்க்ஸ், பனாக்கே, ஐ.டி.ஐ உள்ளிட்ட 27 நிறுவனங்கள் விரைவில் தங்கள் உற்பத்தியை தொடங்க உள்ளன.

அவை, லேப்டாப், டேப்லட், டெஸ்க்டாப், சர்வர்கள், மற்றும் ஹார்டுவேர் பார்ட்ஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் தெரிவிக்கும்போது, ‘பி.எல்.ஐ. திட்டத்தின் கீழ் உற்பத்தி தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட 27 தொழில்நுட்ப நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்க தயாராக உள்ளன. 4 நிறுவனங்கள் அடுத்து வரும் 90 நாட்களுக்குள் உற்பத்தியை தொடங்கும். அதன் மூலம் பெறப்படும் ரூ3 ஆயிரம் கோடி முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும். 50,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1.5 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படும். அதனால் கூடுதலாக ரூ3.5 லட்சம் கோடி சந்தை உற்பத்தி மதிப்பு உருவாகும் ’ என்று கூறினார்.

டீப்பேக்ஸ் வீடியோ ஒன்றிய அரசு நோட்டீஸ்
ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களிடம் ‘டீப்ேபக்ஸ்’ என்ற போலி வீடியோ பதிவுகளை தடுப்பது குறித்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘ஒன்றிய அரசு ‘டீப்பேக்ஸ்’ வீடியோவை வெளியிட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் மெட்டா, கூகுள் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள நிறுவனங்களிடம் மீட்டிங் நடத்த உள்ளோம். இப்போதைய ஐ.டி. சட்டப்படி போலி வீடியோ பதிவு குறித்து சமூக வலைதள நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதனால் போலி வீடியோக்களை அகற்றுவதுடன், அதுபோன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பதில் அந்த நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி அவர்களுக்கு இனிமேல் எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படாது’ என்று அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

The post ரூ3,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு; பி.எல்.ஐ திட்டத்தில் கணினி ஹார்டுவேர் தயாரிப்பு: 27 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Govt ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுடன் அமலாக்கத்துறை இணைந்து...