×

இத்தாலியன் பூங்காவில் டெல்பினியம் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு


ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவில் பூத்துள்ள டெல்பினியம் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இந்த பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள், பெரணி செடிகள், மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் பல்லாயிரம் மலர்கள் பூத்துக் குலுங்கும். மேலும், முதல் சீசன் போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இது தவிர இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தற்போது 2ம் சீசன் நிறைவடைந்த நிலையில், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து மலர் செடிகளையும் பூங்கா ஊழியர்கள் அகற்றி விதை சேகரிப்பு மற்றும் நடவு பணிகளுக்காக பூங்காவை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்காவில் மட்டும் டெல்பினியம் மலர் செடிகளில் மட்டும் மலர்கள் பூத்து காணப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

The post இத்தாலியன் பூங்காவில் டெல்பினியம் மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Italian Park ,Ooty Botanical Garden.… ,
× RELATED இத்தாலியன் பூங்காவில் பூத்த மலர்கள்