×

கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலி 6 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களமசேரியில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி காலை அரங்கில் திடீர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பலியானார். தொடர்ந்து சாலி, அவரது மகள் லிப்னா ஆகியோர் பலியாகினர். இது தவிர மேலும் 3 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தனர். இதற்கிடையே சாலியின் மகன்களான பிரவீன், ராகுல் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன் (24) நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் இறந்தார்.

இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. பிரவீன் மரணமடைந்ததை தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குண்டுவெடிப்பில் பலியாகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாலியின் இன்னொரு மகன் ராகுல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த மேலும் 16 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

The post கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலி 6 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Christian ,Thiruvananthapuram ,Jehovah's Witnesses ,Kalamazeri ,Kochi, Kerala ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு