×

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சுதந்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு வயது 102. இவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.இரு நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை 9.30 மணி அளவில் சங்கரய்யா காலமானார்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியினரிடமும் தனது இரங்கலை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சங்கரய்யாவின் உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 2 மணி முதல் அங்கு சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தை தொடர்ந்து, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க தமிழக அரசின் முழு அரசு மரியாதை சங்கரய்யாவின் உடலுக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சங்கரய்யாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Sankaraya ,Chennai ,Marxist Party ,Dinakaran ,
× RELATED தமிழைப்பற்றி பேசி தமிழர்களை ஏமாற்றப்...