×

அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்து ஜோதிடர் மோசடி புதையல் இருப்பதாக ரூ. 5.60 லட்சம் பறிப்பு

மேட்டூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த மாதேஸ்வரனிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அவர், வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுக்க சிறப்பு பூஜை செய்யவேண்டும் என்று கூறி, ரூ. 5.60 லட்சத்தை வாங்கியுள்ளார். பணம் கொடுத்து ஒருமாதம் ஆகியும் ஜோதிடர் புதையலை எடுத்து தராததால், அவரை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். புவனேஸ்வரியின் உறவினரான மேரியின் மகனுக்கு திருமணமாகாததற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி ஜோதிடர் மாதேஸ்வரனை அழைத்துள்ளனர். அவர் மேட்டூர் காவிரியில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறவே, மேரி, புவனேஸ்வரி, அவரது கணவர் முருகேசன் மற்றும் இருவர் டூவீலரில் நேற்று மேட்டூர் வந்துள்ளனர். ஜோதிடர் கூறிய இடத்தில் மேரியும் இன்னொருவரும் நின்றிருக்க, மற்றவர்கள் மறைந்திருந்தனர். அப்போது அதிமுக கொடி கட்டி, அதிமுக 3வது வார்டு செயலாளர் என்று எழுதப்பட்டிருந்த பலகை பொருத்தப்பட்டிருந்த கார் வந்தது.

அதில் இருந்து இறங்கிய மாதேஸ்வரன், மேரி உள்ளிட்ட இருவரையும் காருக்கு அழைத்தார். இருவரும் காரில் ஏறியதும், அங்கு மறைந்திருந்த மற்றவர்கள் ஓடி வரவே, ஜோதிடர் காரின் கதவை மூடாமல் வேகமாக இயக்கினார். சைக்கிளில் சென்ற முதியவர் மீது காரின் கதவு மோதியதில், அவர் காயமடைந்தார். அப்பகுதியினர் சுற்றிவளைக்கவே மாதேஸ்வரன், காரில் இருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து வந்த மேட்டூர் போலீசார், ஜோதிடர் பற்றி சொந்த ஊரில் புகார் செய்யும்படி கூறி அனுப்பி வைத்தனர். அதிமுக கொடியுடன் வலம் வந்த ஜோதிடர் மாதேஸ்வரன், கடந்த 2021ல் நீக்கப்பட்டவர் என்று அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

The post அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்து ஜோதிடர் மோசடி புதையல் இருப்பதாக ரூ. 5.60 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Mettur ,Pongalur ,Palladam ,Tirupur ,Bhubaneswari ,Kolathurai ,
× RELATED கூலி தொழிலாளி சடலம் மீட்பு