×

மாநில உரிமையை மீட்க குமரியில் இருந்து பைக் பேரணி தொடக்கம் திராவிடத்தால் பூட்டப்பட்ட தமிழ்நாட்டை பாஜவால் உடைக்க முடியாது: குட்டி கதை சொல்லி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவில்: ‘திராவிடத்தால் பூட்டப்பட்ட தமிழ்நாட்டை பாஜவால் உடைக்க முடியாது’ என்று குட்டிகதையை சொல்லி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு, டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக இளைஞர் அணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பிரசார பேரணி 234 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளது. இந்த பேரணியை கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: நாம் இங்கு இரண்டாவது மாநில மாநாட்டிற்காக கூடியிருக்கிறோம். இந்த மாநில மாநாட்டிற்கு பெயர் மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒவ்வொரு உரிமையாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தட்டி கேட்க வேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாநில மாநாடு. உங்களையெல்லாம் பார்க்கும் போது கம்பீரமாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கருப்பு சிவப்பு டீசர்ட் அணிந்து போருக்கு தயாராகின்ற போர்வீரர்கள் போல் காட்சியளிக்கிறீர்கள். நீங்கள் அடுத்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருத்தரையும் சந்திக்க போகிறீர்கள். இந்த ஒன்பது வருடத்தில் ஒன்றிய அரசு நமது தமிழ்நாட்டிற்கு என்னென்ன இன்னல்களை கொடுத்திருக்கிறது, இடையூறுகளை கொடுத்துள்ளது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மிக முக்கியம் 13 நாட்கள் நீங்கள் பயணம் செய்ய போகிறீர்கள். வரும் 27ம் தேதி வரை 13 நாட்களில் 8 ஆயிரத்து 647 கி.மீ தூரத்தை கடந்து சேலத்தில் முடியும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் ஒரு உவமையை கூறுகிறேன். ஒரு பூட்டப்பட்ட பூட்டு, ஒரு சுத்தியல், ஒரு சாவி. அந்த பூட்டை திறப்பதற்கு சுத்தியல் எவ்வளவு முயற்சி செய்கிறது, அந்தப் பூட்டோட தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறது, ஆனால் பூட்டு திறக்கப்படவில்லை. ஆனால் சாவி என்ன பண்ணுது, ரொம்ப சுலபமா பூட்டை தொறந்துடுச்சு. சுத்தியல் சாவியை பார்த்து கேட்டது, நான் உன்ன விட வலிமையா இருக்கேன், பெருசா இருக்கேன் ஆனா நீ மட்டும் எப்படி சுலபமா திறந்தாய் என கேட்டது, சாவி கூறியது, நீ பூட்டோட தலையில ஓங்கி ஓங்கி அடிக்கிற, நீ சாந்தமா சொல்லணும், நீ பூட்ட மதிக்காம அதோட தலையில ஓங்கி ஓங்கி அடிக்கிற. ஆனா நான் சாவி, நான் நேரடியா போய் பூட்டோட இதயத்தை தொடுவேன், அதனாலதான் என்னால திறக்க முடியுது. அப்படின்னு சாவி சொல்லிவிட்டது. இந்த இடத்துல நீங்க புரிந்து கொள்ள வேண்டும், பூட்டு என்பது தமிழ்நாடு, சாவி என்பது திமுக இயக்கம், நமது தலைவர் மு.க.ஸ்டாலின், சுத்தியல் என்பது ஒன்றிய பாஜ அரசு. ஒன்றிய பாஜ அரசு இப்படித்தான் தமிழ்நாட்டில் ஒவ்வொன்றையும் திணிக்க வேண்டும் என்று தலையில் இடியாக இடிக்கிறது. எனவே இதனை மக்களிடம் சேர்க்க வேண்டும். எவ்வளவுதான் தமிழ்நாட்டுக்குள் பாஜ நுழைய முயற்சி செய்தாலும் அதனால் நுழையவே முடியாது.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோரும் பேசினர். ஞானதிரவியம் எம்.பி, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மாநில உரிமையை மீட்க குமரியில் இருந்து பைக் பேரணி தொடக்கம் திராவிடத்தால் பூட்டப்பட்ட தமிழ்நாட்டை பாஜவால் உடைக்க முடியாது: குட்டி கதை சொல்லி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nadu ,Minister ,Udayanidhi Stalin ,Nagercoil ,Udhayanidhi Stalin ,Bajja ,Nadu'.… ,Dravidian ,Tamil Nadu ,Kumari ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்