×

கடன் பெற்று தருவதாக பணமோசடி போலீஸ் சம்மனுக்கு நமீதா கணவர் பதில்: அண்ணாமலைக்கு பணம் பட்டுவாடா செய்ய பாலமாக இருந்த பாஜ நிர்வாகி பற்றி திடுக் தகவல்

சேலம்: ஒன்றிய அரசின் பெயரை சொல்லி பணமோசடியில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நடிகை நமீதாவின் கணவர், பாஜ நிர்வாகி ஆகியோர் உடல்நலம் சரியில்லை என்று சேலம் போலீசுக்கு பதில் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் முத்துராமன் (60). 3ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பை தொடங்கி அதன் தேசிய தலைவராக தன்னையே நியமித்துக் கொண்டார். இது ஒன்றிய அரசின் பதவி எனக் கூறி, அதன் செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவை நியமனம் செய்தார்.

இவர்கள் இப்பிரிவின் தமிழ்நாடு தலைவராக நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியை நியமித்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது தேசிய கொடி கட்டிய காரில், அரசு முத்திரையுடன் வந்து முத்துராமன் இறங்கினார். உண்மையாகவே இது ஒன்றிய அரசு பதவி தானா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், சூரமங்கலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் விசாரணை நடத்தினர். அப்போது ஒன்றிய அரசின் பெயரைச் சொல்லி முத்துராமன் ஏமாற்றியது தெரியவந்தது.

இதற்கிடையில் சேலத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவருக்கு, தமிழ்நாடு தலைவர் பதவி கொடுப்பதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக கொடுத்த புகாரின்பேரில் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மகள் திருமணம் நடக்க இருப்பதாக கூறி, நீதிமன்ற உத்தரவின்பேரில் 6 நாட்கள் இடைக்கால ஜாமீனில் ஒரு எஸ்.ஐ., 4 போலீஸ் பாதுகாப்புடன் முத்துராமன் உசிலம்பட்டி சென்றுள்ளார். அவர் நாளை சேலம் சிறைக்கு திரும்புவார்.

இந்த சூழ்நிலையில், முத்துராமன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணத்திற்கு சிவகங்கை வந்தபோது, ரூ.1.50 கோடி கொடுத்ததாக முத்துராமன் கூறினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் நடிகை நமீதா கணவர் சவுத்ரியையும், பாஜ ஊடகப்பிரிவு மாநில செயலாளராக இருந்த மஞ்சுநாத்தையும் விசாரிக்க சூரமங்கலம் போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். நேற்றுமுன்தினம் அவர்கள் இருவரும் போலீசில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு அந்த கடிதம் போலீசுக்கு வந்தது. அதில், ‘உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் விசாரணைக்கு வர முடியவில்லை. சரியானதும் விசாரணைக்கு வருகிறோம். எங்கள் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள்’ என்று கூறியுள்ளனர். இதற்கிடையே பாஜ ஊடக பிரிவு செயலாளரான மஞ்சுநாத் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தான் முத்துராமனுக்கும், பாஜ தலைவர்களுக்கும் இடையேபாலமாக இருந்து செயல்பட்டுள்ளார். இவர் மூலமாகத்தான் பணம் பட்டுவாடா நடந்ததாக, போலீஸ் காவலில் முத்துராமன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் மஞ்சுநாத்தை விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.

முதலில் காவலில் எடுத்து விசாரித்தபோது, முத்துராமன் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை கூறவில்லை. 3ம் வகுப்பு படித்துள்ள இவர், ஒன்றிய அரசின் சின்னத்தை பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு சென்றது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே முத்துராமனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு கடந்த 8ம் தேதியே சூரமங்கலத்தில் இருந்து சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதையடுத்து இப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஒன்றிய அரசின் பெயரை பயன்படுத்தி யாரிடமெல்லாம் பணமோசடி செய்தனர்? இவ்வாறு ஏமாற்றி வாங்கிய பணம் யார்-யாரிடம் கொடுக்கப்பட்டது? என்பது போன்ற கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கும் என தெரிகிறது. அதுவும் பாஜ நிர்வாகியான மஞ்சுநாத், இதுவரை எவ்வளவு பணம் மோசடியாக பெற்றுள்ளார்? அதனை யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுத்தார்? என்பது போன்ற கேள்வியுடன் போலீசார் தயாராக இருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்தினால் பாஜவின் முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி தலைவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கடன் பெற்று தருவதாக பணமோசடி போலீஸ் சம்மனுக்கு நமீதா கணவர் பதில்: அண்ணாமலைக்கு பணம் பட்டுவாடா செய்ய பாலமாக இருந்த பாஜ நிர்வாகி பற்றி திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Namitha ,BJP ,Annamalai ,Salem ,Union government ,Nameeta ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...