×

குமரியில் இளம்பெண்களின் படங்களை மார்பிங் செய்து மிரட்டல்; பி.எட். பட்டதாரி வாலிபரின் செல்போனில் திகைக்க வைக்கும் ஆபாச வீடியோவால் பரபரப்பு

நாகர்கோவில்: குமரியில் கைதான பி.எட். பட்டதாரி செல்போனில் திகைக்க வைக்கும் வகையில் ஏராளமான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். அங்கிருந்த கடை ஊழியர் குமரி மாவட்டம் மணலிக்கரை புதூர்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டேன்லி பிரின்ஸ் (34) என்பவரிடம், ‘தான் அணிந்துள்ள தங்க நகை போல், கவரிங் நகை வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதற்கு ஸ்டேன்லி பிரின்ஸ், ‘நீங்கள் நகை அணிந்திருப்பது போல் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள்’ என்று கூறியுள்ளார். இதை நம்பி, அந்த பேராசிரியை, தனது புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேன்லி பிரின்சுக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட ஸ்டேன்லி பிரின்ஸ், தினமும் செல்போனில் தொந்தரவு செய்துள்ளார். உடனே காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று பேராசிரியை கூறியதும், அவரது போட்ேடாக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியுள்ளார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனே மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை நடத்தி ஸ்டேன்லி பிரின்சை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பி.எட். பட்டதாரியான ஸ்டேன்லி பிரின்ஸ், நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல நகை கடைகள், ஜவுளி கடைகளில் பணியாற்றி உள்ளார். எந்த கடையிலும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் வேலை பார்ப்பதில்லை. இவரின் நடவடிக்கை சரியில்லாமல் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இவர் பணியாற்றும் கடைகளில் தன்னுடன் பணிபுரியும், இளம்பெண்களுடன் பழகி அவர்களின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு மெசேஜ், வீடியோக்கள் அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரிடம் ஏராளமான இளம்பெண்களின் செல்போன் நம்பர்கள், போட்டோக்கள் இருந்தன. இளம்பெண்களை மிரட்டியும் வந்துள்ளார். தனது விருப்பத்துக்கு இணங்காத இளம்பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

மனைவியையும் விட்டு வைக்கவில்லை
ஸ்டேன்லி பிரின்ஸ் கருங்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் பழகி, அவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த 2 நாட்களிலேயே ஸ்டேன்லி பிரின்சின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த பெண் பிரிந்து சென்றார். அவரது புகைப்படத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு மிரட்டிய ஸ்டேன்லி பிரின்ஸ், தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார். இவருக்கு பயந்து அந்த இளம்பெண்ணும் புகார் அளித்துள்ளார். தற்போது வரை ஸ்டேன்லி பிரின்ஸ் மீது 2 இளம்பெண் புகார் அளித்துள்ளனர். மேலும் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் கூறி உள்ளனர்.

The post குமரியில் இளம்பெண்களின் படங்களை மார்பிங் செய்து மிரட்டல்; பி.எட். பட்டதாரி வாலிபரின் செல்போனில் திகைக்க வைக்கும் ஆபாச வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,B.Ed ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி