×

ஊட்டி அருகே காட்டேரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

ஊட்டி: ஊட்டி அருகே காட்டேரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். தென்மேற்கு பருவமழையின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி, காட்டேரி மற்றும் மாயார் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில் இந்த நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நீலகிரியில் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால் காட்டேரி அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நீர் காட்டேரி நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது தொலைவில் இருந்து பார்க்கும்போது வெள்ளி இழைபோல் காட்சியளிக்கிறது. இதனை ஊட்டியில் இருந்து கேத்தி பாலாடா, காட்டேரி டேம் வழியாக குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். தற்போது மழை குறைந்துள்ள நிலையிலும் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. மீண்டும் மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

The post ஊட்டி அருகே காட்டேரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Vampire Falls ,Ooty ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...