×

வால்பாறை அருகே வீடுகளை உடைத்த காட்டு யானைகள்

வால்பாறை : வால்பாறை அருகே காட்டு யானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் புகுந்து வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்தன.கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ளது ஸ்டேன்மோர் எஸ்டேட். நேற்று காலை 6 மணி அளவில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 யானைகள் தொழிலாளர் குடியிருப்பிற்குள் புகுந்தன. அங்குமிங்கும் அலைந்த யானைகள் சுந்தர்ராஜன் என்பவர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து உணவு தேடி உள்ளன. வீட்டில் இருந்த நாற்காலி, கிரைண்டர், குக்கர் மற்றும் பாத்திரங்களை சேதப்படுத்தின. பாத்திர, பண்டங்களை சுவற்றை உடைத்து வெளியே வீசின. இதில் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

சுந்தர்ராஜன் தீபாவளியையொட்டி வெளியூர் சென்றிருந்ததால் உயிர் தப்பினார். அவரது வீட்டின் அருகே உள்ள 5 வீடுகளின் கதவுகளை யானைகள் உடைத்துள்ளன. சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் கூட்டத்தில் உள்ள குட்டி யானைகள் வீட்டை உடைப்பதாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் ஜே.பி.ஆர். பாஸ்கர் அப்பகுதியில் ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தார். வீட்டின் கூரை, கட்டிடம், பொருட்கள் என ரூ.1 லட்சத்திற்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர் தெரிவித்தார்.

பாதிப்படைந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். பாதிப்படைந்த குடும்பத்திற்கு தமது சொந்த செலவில் உணவு மற்றும் பண உதவிகள் செய்தார். இதேபோல திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உதவிகள் வழங்கினர். தொடர்ந்து அதே பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

The post வால்பாறை அருகே வீடுகளை உடைத்த காட்டு யானைகள் appeared first on Dinakaran.

Tags : Valparai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை