×

குட்டைகளில் விஷம் கலந்ததால் ₹40 லட்சம் இறால்கள் இறப்பு

*சீர்காழி அருகே பரபரப்பு

சீர்காழி : சீர்காழி அருகே குட்டைகளில் விஷம் கலந்ததால் ₹40 லட்சம் மதிப்பு இறால்கள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் காவிரி சங்கமத்துறை அருகே 150க்கும் மேற்பட்ட குட்டைகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு மந்தகரையை சேர்ந்த தனமூர்த்தி(45) என்பவருக்கு சொந்தமான 2இறால் குட்டைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இந்த இறால் குட்டைகளில் இருந்த ₹40 லட்சம் மதிப்பிலான இறால்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன.

இந்த தகவல் அறிந்த உரிமையாளர் தனமூர்த்தி, குட்டைகளுக்கு சென்று பார்வையிட்டபோது குட்டை அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்தது. குட்டைகளில் விஷம் கலந்ததால் இறால்கள் இறந்து மிதந்து தெரிய வந்தது. பூம்புகார் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஷபாட்டிலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குட்டைகளில் விஷம் கலந்தது யார், எதற்காக விஷம் கலந்தனர் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குட்டைகளில் விஷம் கலந்ததால் ₹40 லட்சம் இறால்கள் இறப்பு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi Sirkazhi ,Sirkazhi ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!