×

சத்தியமங்கலம் அருகே விபத்து புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் பலி

*அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த பூசாரியும் இறந்த சோகம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே புளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர்கள் ராகவன் (26), பூவரசன் (24). கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூர் பகுதியை சேர்ந்தவர்கள் மயிலானந்தம் (30), கீர்த்திவேல் துரை (28), இளையராஜா (33). நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் சத்தியமங்கலம்-கோவை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராகவன் ஓட்டினார்.

செண்பகப்புதூர் அடுத்துள்ள வேட சின்னானூர் என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. காரில் இருந்த பூவரசன், கீர்த்திவேல் துரை ராகவன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு படுகாயம் அடைந்த மயிலானந்தம், இளையராஜா ஆகிய இருவரையும் கோபிசெட்டிபாளையம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் மயிலானந்தம் உயிரிழந்தார். காயம் அடைந்த இளையராஜாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியான கீர்த்திவேல் துரை என்பவர் சத்தியமங்கலம் அருகே உள்ள அங்காளம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. பூவரசன் ஐடி நிறுவனத்திலும், ராகவன் டிரைவராகவும், மயிலானந்தம் பனியன் கம்பெனி தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனர்.

விபத்தில் இறந்த 4 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. தீபாவளி பண்டிகை தினத்தன்று விபத்தில் 4 பேர் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் சுவற்றின் மீது பைக் மோதி 2 பேர் பலி

கோபி கச்சேரிமேடு அருகே உள்ள ராம்நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜ்குமார் (25). பனியன் கம்பெனி ஊழியர். கோபி வண்டிபேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி மகன் நவீன்குமார் (23). எலக்ட்ரீசியன். இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை நவீன்குமார் ஓட்டிச்சென்றார். மொடச்சூர் அருகே சென்றபோது அங்குள்ள கோயில் சுவற்றின் மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார். காயமடைந்த நவீன்குமாரை மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நவீன்குமார் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post சத்தியமங்கலம் அருகே விபத்து புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...