புதுடெல்லி: மணிப்பூரில் 9 பிரிவினைவாத குழுக்கள், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது.மணிப்பூரில் கடந்த 3ம் தேதி மெய்டீ மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாகியும் இந்த மோதல் நீடித்து வரும் நிலையில்,180க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மெய்டீ பிரிவினைவாத குழுக்கள், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி,மக்கள் விடுதலை படை(பிஎல்ஏ), அதன் அரசியல் அமைப்பான புரட்சிகர மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(யுஎன்எல்எப்), அதன் ஆயுத குழுவான மணிப்பூர் மக்கள் ராணுவம்,காங்லேபாக் மக்கள் புரட்சி கட்சி(பிரீபாக்), அதன் ஆயுத குழுவான சிவப்பு ராணுவம், காங்க்லே யால் கான்பா லுப்(கேஓய்கேஎல்),ஒருங்கிணைப்பு குழு(கார்காம்), காங்க்லேபாக் சோசலிஸ்ட் ஒற்றுமை கூட்டணி(ஏஎஸ்யுகே) குழுக்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மணிப்பூரை பிரிப்பதற்கு ஆயுதமேந்திய போராட்டத்துக்கு இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இது போன்ற அமைப்புகள் மீது உடனடியாக தடை விதிக்காவிட்டால், தங்கள் அமைப்புகளை சேர்ந்தவர்களை துாண்டி விட்டு வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடலாம். நாட்டுக்கு எதிராக உள்ள சக்திகளுடன் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் 9 பிரிவினைவாத குழுக்களுக்கு 5 ஆண்டு தடை: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.