×

இஸ்ரேல் முற்றுகையிட்டு தாக்குதல் காசா மருத்துவமனையில் 3,650 பேரின் உயிருக்கு ஆபத்து: குழந்தைகள் உள்பட ஏராளமான நோயாளிகள் தவிப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும், காசா மருத்துவமனையில் இருக்கும் 3,650 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது. அதேநேரம் காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மருத்துவமனைகள் மீதான தங்களது ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அழுத்தங்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை அல் ஷிபா மருத்துவமனைக்கு 300 லிட்டர் எரிபொருளை வழங்கியதாகவும், ஆனால் அதனை ஏற்க ஹமாஸ் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘எங்களது படையினர் தங்களின் உயிரைப் பணையம் வைத்து அல்-ஷிபா மருத்துவமனைக்கு 300 லிட்டர் எரிபொருளைக் கொண்டு சென்றனர். ஆனால் ஹமாஸ் முட்டுக்கட்டையால் அதனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கடந்த சில வாரங்களாகவே காசாவில் உள்ள மருத்துவமனைகளில் எரிபொருள் இல்லை. உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்றெல்லாம் கூறி வருகின்றன. அப்படி இருக்கும்போது ஏன் இந்த எரிபொருளை ஏற்க மறுக்க வேண்டும்’ என்று வினவியுள்ளது.

இதற்கிடையே ஷிபா மருத்துவமனை இயக்குனர் மொகமத் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசாவின் அல்-ஷிபா மருத்துவமனையில் 3650 பேர் உள்ளனர். இவர்களின் நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 600 முதல் 650 உள்நோயாளிகள் உள்ளனர். அத்துடன் 200 முதல் 500 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 2,500 இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மின்சாரம், குடிநீர், உணவு போன்ற வசதிகள் இல்லாததால், அவர்களது உயிர்கள் ஆபத்தில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஹமாசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ ஷிபா மருத்துவமனையில் 3000 நோயாளிகள் மற்றும் மருத்துவர்களும், 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான இடம் பெயர்ந்த மக்களும் உள்ளனர்’ என்று குறிப்பிட்டு உள்ளது. மருத்துவமனையில் சிக்கித்தவிப்பவர்களின் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. அங்கு மின்சாரம், குடிநீர் இல்லாமல் அனைவரும் ஆபத்தில் உள்ளனர். மருத்துவமனை கேட் அருகே இஸ்ரேல் படைக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் மோதல் நடப்பதால் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்த பலரும் தப்பி ஓடி வருகிறார்கள். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

* இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

லெபனான் எல்லையில் இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் தரப்பில் ஏராளமானோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் லெபனான் எல்லையில் பதற்றம் உருவாகி உள்ளது.

* ஹமாஸ் தளபதி பலி

காசா மருத்துவமனையில் ஏறத்தாழ 1,000 பேரையும் நோயாளிகளையும் பிணைக்கைதிகளாக வைத்திருந்ததற்குப் பொறுப்பான மூத்த ஹமாஸ் தளபதி அஹ்மத் சியாமை கொன்று விட்டதாக இஸ்ரேல் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் முற்றுகையிட்டு தாக்குதல் காசா மருத்துவமனையில் 3,650 பேரின் உயிருக்கு ஆபத்து: குழந்தைகள் உள்பட ஏராளமான நோயாளிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Israeli ,Gaza ,Tel Aviv ,Israel ,Hamas ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...