ஈரோடு, நவ.11: நம்பியூர் வட்டாரத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் குளம், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பவானி ஆற்றில் மழைநீர் ஓடுகிறது.
மழையினால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் நம்பியூர் வட்டாரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழையினால் விளை பயிர்கள் மூழ்கியது இந்நிலையில், இதன் பாதிப்பு விபரங்களை கணக்கெடுக்கும்படி வருவாய்த்துறை, வேளாண் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, நம்பியூர் வட்டாரத்தில் மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு பணிகளில் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேங்கி உள்ள மழை நீரானது 3 நாட்களுக்குள் வடிந்து விடும் என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் தற்போதைக்கு இல்லை. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வீடுகள் பாதிப்பு மற்றும் கால்நடைகள் இழப்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
The post நம்பியூர் வட்டத்தில் மழை சேதம் கணக்கெடுப்பு பணி appeared first on Dinakaran.