×

ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 5 மொழிகளில் அய்யன் செயலி: கேரள அமைச்சர் துவக்கி வைத்தார்

கூடலூர்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனிடையே, ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், பெரியார் வனவிலங்கு சரணாலய மேற்கு பிரிவின் தலைமையில் ‘அய்யன்’ என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், சுவாமி அய்யப்பன் ரோடு, பம்பை-நீலிமலை-சன்னிதானம், எருமேலி-அழுதகடவு-பம்பை, சத்திரம்-உப்புபாறை-சன்னிதானம் வழித்தடங்களில் இந்த செயலி மூலம் சேவைகள் கிடைக்கும்.

வனப்பாதையில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவு, தங்குமிடம், யானைப் படைக்குழு, பொதுக்கழிவறைகள், ஒவ்வொரு தளத்திலிருந்து சன்னிதானம் வரையிலான தூரம், தீயணைப்புப்படை, காவல் உதவி நிலையம், சுற்றுச்சூழல் கடை, இலவச குடிநீர் விநியோக மையங்கள் மற்றும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கான தூரம் குறித்த தகவல்கள் இந்த செயலியில் உள்ளன. இந்நிலையில், அய்யன் மொபைல் செயலியை பம்பை ஸ்ரீராம சகேதம் ஆடிட்டோரியத்தில் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

இது குறித்து அமைச்சர் சசீந்திரன் கூறுகையில், ‘ஐயப்ப பக்தர்கள் பின்பற்றவேண்டிய ஆசாரம் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்கள், பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தின் வளம் மற்றும் சபரிமலை கோயில் பற்றிய தகவல்கள் இச்செயலியின் பயன்பாட்டில் கிடைக்கின்றன. கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நிறுவக்கூடிய ‘அய்யன்’ செயலி, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கிடைக்கிறது. மேலும் வனப்பாதையின் வாயில்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமும் இந்த பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்களும் இதில் உள்ளன. செயலி பயன்பாடு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வேலை செய்யும்’’ என்றார்.

The post ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 5 மொழிகளில் அய்யன் செயலி: கேரள அமைச்சர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Cuddalore ,Sabarimala Ayyappan ,Pathanamthitta district ,
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...