×

காதல் கணவரை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா

செங்கல்பட்டு: வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதல் கணவரை மீட்டு தரக்கோரி, இளம்பெண் நேற்று செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறையை சேர்ந்தவர் சந்திரசேகர். ஆட்டோ டிரைவர். இவரது மகள் கீதா (25). இவரும், மதுராந்தகம் ஒத்தவாடை வன்னியர்  தெருவை சேர்ந்த முத்துக்குமார் (30) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதற்கிடையில், முத்துக்குமார் கீதாவுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கீதா, முத்துகுமாரிடம் கேட்டார். அப்போது, அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து கீதா, மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த வாரம் புகார் அளித்தார். ஆனால் போலீசார், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும், உயரதிகாரிகள் உத்தரவு இல்லாமல் நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாது எனகூறி, கீதாவை அலைகழித்து வந்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்தில் கீதா, கடந்த வாரம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரை பெற்று கொண்ட அதிகாரிகள் அவரை மீண்டும் மேல்மருவத்தூர் காவல் நிலையத்துக்கு அனுப்பினர். அதன்படி கீதா, மீண்டும் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் சென்று கேட்டார். ஆனாலும், மகளிர் போலீசார் முறையான பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை கீதா, தனது 5 வயது மகளுடன், செங்கல்பட்டு எஸ்பி அலுவலகம் வந்தார். அங்கு திடீரென, அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீதாவிடம்,  அங்கிருந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர் தர்ணாவை கைவிட்டு, அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் எஸ்பி அலுவலகத்தில் சிறிது  நேரம்  பரபரப்பு நிலவியது….

The post காதல் கணவரை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா appeared first on Dinakaran.

Tags : dakkori sp ,Chengalpattu ,Dharakkori ,Chengalpattu SP ,Tarna ,Dharakori SP ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா