×

பரனூர் சுங்கசாவடியில் நெரிசலை தவிர்க்க இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி உருவாக்கம்: போலீசார் ஆய்வு

செங்கல்பட்டு, நவ.10:பரனூர் சுங்கசாவடியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டூ வீலர்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனை காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு மாவட்ட துணை கண்காணிப்பாளர் புகழ்கணேசன் மேற்பார்வையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் புகழ், உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் அந்த சுங்கசாவடியில் ஆய்வு செய்தனர். தீபாவளி பண்டியை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட, பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி ஏராளமானோர் செல்வார்கள். இதனால், சென்னை பெருங்களத்தூர், பரனூர் மற்றும் தொழுப்பேடு சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்த போக்குவரத்து நெரிசலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்களை மாற்று பாதையில் வண்டலூர், கேளம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கார், பேருந்துகள், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல ஆறு பூத்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இருக்கர வாகனங்கள் செல்ல தனி வழி உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பேருந்து பயணிகளுக்காக தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

The post பரனூர் சுங்கசாவடியில் நெரிசலை தவிர்க்க இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி உருவாக்கம்: போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Paranur tollbooth ,Chengalpattu ,Paranur toll booth ,Paranur toll ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!