×

நரிக்குடி அருகே பரபரப்பு காவலுக்கு இருந்தவர்களை வெட்டி ஆடு திருட முயற்சி: 4 பேர் அதிரடி கைது

 

திருச்சுழி, நவ.10: ராமநாதபுரம் மாவட்டம், ஆண்டிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஞானதேசிகன்(58). இவர் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து கிடை போட்டு தொழில் செய்து வருகிறார். இவரது ஆடுகளை நரிக்குடி அருகே உலக்குடி பகுதியில் பூமி என்பவருக்கு சொந்தமான வயில் கிடை போட்டுள்ளார். இங்கு நேற்று முன்தினம் இரவு ஞானதேசிகனும், அவரது நண்பர் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது பகுதியை சேர்ந்த மூர்த்தியும் காவலுக்கு இருந்தனர்.

அப்போது இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஆட்டுகளை திருட வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டனர். ஆத்திரமடைந்த கும்பல் அரிவாளால் திடீரென ஞானதேசிகனின் தலையில் வெட்டினர். தடுக்க வந்த மூர்த்திக்கும் கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனிடையே அலறல் சத்தம் கேட்டு ஆட்கள் வந்ததால், கும்பல் தப்பிவிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த நரிக்குடி போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து நரிக்குடி இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரியாபட்டி அருகே நாங்கூர் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் முருகேசன்(28), ஆலங்குளம் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் முத்துராக்கு(28), மேல கள்ளங்குளம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்த நாட்டம்பலம் மகன் இராமச்சந்திரன்(34), பழநி இந்திரா நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மிதுன்குமார்(28) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் திருச்சுழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருந்து வருவது தெரியவந்துள்ளது.

The post நரிக்குடி அருகே பரபரப்பு காவலுக்கு இருந்தவர்களை வெட்டி ஆடு திருட முயற்சி: 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Narikudi ,Tiruchirappalli ,Gnanadeshikan ,Antichikulam ,Ramanathapuram district ,Dinakaran ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...