×

ரூ.4 கோடி கொடுத்து பதவி பெற்றாரா? நடிகை நமீதா கணவரிடம் போலீசார் விசாரணை

சேலம்: தேசிய கொடி, முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில் உசிலம்பட்டியை சேர்ந்தவர் உள்பட 2 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார் அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் ரூ.4 கோடி கொடுத்து பதவி பெற்றாரா என்று நடிகை நமீதாவின் கணவரிடம் போலீசார் போனில் விசாரணை நடத்தியுள்ளனர். சேலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு தலைவரான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கூட்டம் நடத்தினர்.

இதில், அரசின் முத்திரை, தேசிய கொடி ஆகியவற்றை பயன்படுத்தி ஏமாற்றியதாக புகாரின் அடிப்படையில், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்கள் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி தருவதாக தன்னிடம் ரூ.50 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டு, ரூ.4 கோடி வாங்கி நமீதாவின் கணவருக்கு பதவி கொடுத்ததாக கோபால்சாமி என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், இருவரும் ஒன்றிய அரசின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதும், மோசடி செய்த பணத்தில் சொத்து வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை முடிந்து இருவரையும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேநேரத்தில் நடிகை நமீதாவின் கணவரிடம் ரூ.4 கோடி கொடுத்து பதவி பெற்றாரா என போலீசார் போனில் விசாரணை நடத்தினர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், நடிகை நமீதாவின் கணவரிடம் போனில் விசாரித்தோம். தேவைப்பட்டால் அவருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்துவோம் என்றனர்.

The post ரூ.4 கோடி கொடுத்து பதவி பெற்றாரா? நடிகை நமீதா கணவரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nameeta ,Salem ,Usilampatti ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்